×

நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்று மோசடி செய்த புகாரில் அழகப்பன் என்பவரிடம் விசாரணை!

சென்னை: சென்னை: நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்று மோசடி செய்த புகாரில் அழகப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. நடிகை கவுதமி அளித்த புகாரை அடுத்து அழகப்பனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டுக்குச் சென்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை கவுதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பாஜகவில் இருக்கும் அழகப்பன் என்பவர் தனது சொத்துகளை ஏமாற்றியதாக நடிகை கவுதமி புகாரளித்திருந்தார். அழகப்பனுக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் உதவி செய்வதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில்; “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாகக் கூறினார்.

அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து நடிகை கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்த அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோசடி புகாரில் தொடர்புடைய நிலத்தின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்று மோசடி செய்த புகாரில் அழகப்பன் என்பவரிடம் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Alagappan ,Gauthami ,CHENNAI ,Gautami ,
× RELATED இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!